”மினி விளையாட்டு அரங்கம் அமைப்பதற்கான இடம் தேர்வு பணிகளை விரைவாக முடிக்க வேண்டும்,” என, அதிகாரிகளுக்கு அமைச்சர் மெய்யநாதன் உத்தரவிட்டு உள்ளார்.
தமிழக விளையாட்டு மேம்பாட்டு துறை அமைச்சர் மெய்யநாதன், துறை அதிகாரிகளுடன் நேற்று ஆலோசனை நடத்தினார்.இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டு துறை செயலர் அபூர்வா, உறுப்பினர் ஆனந்தகுமார் பங்கேற்றனர்.
அப்போது அமைச்சர் பேசியதாவது:மாவட்ட விளையாட்டு அரங்கங்களை மேம்படுத்த வேண்டும்.விளையாட்டு வீரர் – வீராங்கனை, அலுவலர்கள், பணியாளர்களின் கோரிக்கைகளை பரிசீலித்து உடனடியாக நிறைவேற்ற வேண்டும்.
தமிழக வீரர்கள், சர்வதேச விளையாட்டு போட்டிகளில் பங்கேற்கவும், வெற்றி பெறவும் தேவையான வசதிகளையும், பயிற்சியையும் அளிக்க வேண்டும். நம் பிள்ளைகள் என்ற உணர்வுடன், விளையாட்டு வீரர்களின் சாதனை கனவை நனவாக்க, அதிகாரிகளும், பயிற்சியாளர்களும் முழுமையாக தங்களை ஈடுபடுத்திக் கொள்ள வேண்டும்.இதற்காக, 226 கோடி ரூபாய் செலவிடப்பட உள்ளது.
கிராமப்புற ஏழை மாணவர்களும், இளைஞர்களும் முறையான பயிற்சி பெற, அனைத்து சட்டசபை தொகுதிகளிலும் மினி விளையாட்டரங்கம் கட்ட வேண்டும். அதற்கான இடம் தேர்வு செய்யும் பணியை விரைவாக முடிக்க வேண்டும். சென்னை, மதுரை, திருச்சி மற்றும் நீலகிரியில், ‘ஒலிம்பிக் அகாடமி’ அமைக்கும் பணிகளை விரைவாக செய்ய வேண்டும். இவ்வாறு அவர் பேசினார்.