சென்னை, அண்ணாசாலை, ஓமந்துாரார் அரசினர் தோட்டத்தில், முன்னாள் முதல்வர் கருணாநிதி சிலையை, துணை ஜனாதிபதி வெங்கையா நாயுடு, இன்று (மே 28) மாலை 5 30 மணியளவில் திறந்து வைத்தார் நிகழ்ச்சிக்கு முதல்வர் ஸ்டாலின் தலைமை தாங்கி துணை ஜனாதிபதியை வரவேற்று பேசினார்
விழாவில் கலந்து கொண்ட வெங்கையா நாயுடு மேலும் பேசியதாதவது, ‘ கருணாநிதி தமிழகத்தில் நிலையான ஆட்சி வழங்கினார். சிறந்த பேச்சாளராகவும், நிர்வாகியாகவும் விளங்கினார். இந்தியாவின் ஆற்றல் வாய்ந்த தலைவர்களில் கருணாநிதியும் ஒருவர். கருத்து வேறுபாடுகள் இருந்தாலும் தன் தரப்பு கருத்தினை முன்வைப்பதில் கருணாநிதி தனித் திறன் படைத்தவர்.
கருணாநிதி சிறந்த நிர்வாகி, சமூக சீர்திருத்தவாதி, எழுத்தாளர், இலக்கியவாதி, கவிஞர், படைப்பாளி பத்திரிக்கையாளர் என பன்முக தன்மை கொண்டவர். திரையுலகமாக இருந்தாலும், அரசியலாக இருந்தாலும் அதில் கோலோச்சியவர் கருணாநிதி. எமெர்ஜென்சி கொண்டு வரப்பட்ட போது அதை முழு மூச்சோடு எதிர்த்தவர்.கருணாநிதி கைது செய்யப்பட்ட நேரத்தில் அப்போதைய பிரதமர் வாஜ்பாயுடன் பேசினேன். உடனடியாக கருணாநிதி இருக்கும் இடம் ஓடி வந்தேன்.
நம் தாய்மொழி கண் போன்றது. எனவே நம் தாய்மொழியின் வளர்ச்சிக்கு பாடுபட வேண்டும். எந்த ஒரு மொழியையும் திணிக்கக் கூடாது. எதிர்க்கவும் கூடாது. தமிழ் கலாச்சாரம், இலக்கியம் மொழி வளர்ச்சிக்கு பாடுபட்டவர் கருணாநிதி. மாநிலங்களின் முன்னேற்றம் இல்லாமல் நாடு வளர்ச்சி பெற முடியாது.சிற்பக் கலையில் தமிழகம் சிறந்து விளங்குகிறது. கருணாநிதியின் இச்சிலை உயிரோவியமாக விளங்குகிறது. இந்த வாய்ப்பை வழங்கிய தமிழக அரசுக்கு நன்றி தெரிவித்துக்கொள்கிறேன். இவ்வாறு வெங்கையா நாயுடு பேசினார்
விழாவில் ஸ்டாலின் மேபும் பேசியதாவது,இன்று வாழ்வில் ஒரு பொன்னாளாக உள்ளது. கருணாநிதிக்கு நன்றி தெரிவிக்கும் விதமாக இந்த சிலை அமைக்கப்பட்டுள்ளது. கருணாநிதியால் உருவாக்கப்பட்டது தான் இந்த ஓமந்தூரார் கட்டடம். அந்த வளாகத்திலேயே அவருடைய சிலை அமைக்கப்பட்டுள்ளது கூடுதல் சிறப்பாகும்.
இத்தகைய சிறப்பு மிக்க மிக்க விழாவுக்கு மகுடம் வைத்தது போல துணை ஜனாதிபதி வெங்கையாநாயுடு கலந்து கொண்டு கருணாநிதி சிலையை திறந்து வைத்துள்ளார். கருணாநிதி கைது சமபவத்தின் போது கண்டனக் குரல் எழுப்பியவர் தான் வெங்கையா நாயுடு. அந்த நேரத்தில் ஆட்சியாளர்களை கண்டித்தார். கருணாநிதி சிலையை வெங்கையா நாயுடு திறப்பது சாலப் பொருத்தமானது.
தமிழகத்தில் 5 முறை முதல்வராக பொறுப்பில் இருந்தவர் கருணாநிதி.. பன்முக திறமை கொண்டவர் முன்னாள் முதல்வர் கருணாநிதி. திரையுலகம், இலக்கியம் என பல்வேறு துறைகளிலும் சிறந்து விளங்கியவர் அவர். நவீன தமிழ்நாடு என்பது கருணாநிதியால் உருவாக்கப்பட்டது. தமிழக மக்களின் உயர்வுக்காக போராடினார்.
அவருடைய திட்டங்களினால் உருவானது தான் நவீன தமிழகம். தொழில் வளர்ச்சியால் வேலை வாய்ப்பு பெற்றனர், தமிழக மக்கள் ஒவ்வொருவரும் அவர் தீட்டிய திட்டங்களால் நல் வாழ்வு வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள்அவருக்கு எத்தனை சிலை வைத்தாலும் தகும் என்றார்.