#SNIPER FLASH#
விழுப்புரம் ஆட்சியரிடம் ரூ. 9 கடன் கேட்டு இளைஞர் ஒருவர் மனு அளித்த விவகாரம் கவனம் பெற்றுள்ளது.
விழுப்புரம் ஆட்சியர் மோகன். இவர் இன்று காலை வழக்கம் போல விழுப்புரம் நகராட்சியில் ஆய்வு செய்ய புறப்பட்டுக் கொண்டிருந்தார்.
அப்போது விழுப்புரம் அருகே குமாரக்குப்பம் கிராமத்தைச் சேர்ந்த பிரகாஷ் கோரிக்கை மனு ஒன்றை ஆட்சியரிடம் அளித்தார்.
அம்மனுவில் அவர் கூறியிருப்பதாவது,
விழுப்புரம் புதிய பேருந்து நிலையத்தில் கட்டண கழிவறை செயல்பட்டுவருகிறது. இங்கு சிறுநீர் கழிக்க 50 பைசாவும், மலம் கழிக்க ரூ 1ம் வசூலிக்கவேண்டும் என கட்டண விதியை மீறி சிறுநீர் கழிக்க ரூ 5ம் , மலம் கழிக்க ரூ 10ம் கேட்டு இங்குள்ளவர்கள் பொதுமக்களை மிரட்டுகின்றனர்.
பொதுமக்களில் ஒருவரான என் அவசர நிலையை புரிந்துகொண்டு எனக்கு காலைக்கடன் கழிக்க ரூ 9 கடன் உதவி வழங்கவேண்டுகிறேன். இக்கடனை வருகின்ற 1ம் தேதி திரும்ப செலுத்திவிடுகிறேன்.
மேலும் பொதுமக்களை மிரட்டும் கட்டண கழிவறை ஒப்பந்தத்தை ரத்து செய்து அவர்மீது சட்ட நடவடிக்கை எடுக்குமாறு கேட்டுக்கொள்கிறேன்.
இவ்வாறு மனுவில் அவர் குறிப்பிட்டிருந்தார்.
இதையடுத்து மனு அளித்த பிரகாஷை அழைத்துக்கொண்டு கட்டண கழிவறைக்கு ஆட்சியர் ஆய்வு மேற்கொண்டார்.
அப்போது நடந்தவைபற்றி பிரகாஷிடம் கேட்டார். பின்னர் அக்கட்டண கழிவறைக்கு சென்று அங்கு இருந்தவர்களிடம் கட்டண விவரங்களை கேட்டார். கட்டண விதிப்படி கட்டணம் வசூலிப்பதாக தெரிவித்தனர்.
அப்போது கழிவறையிலிருந்து வெளியே வந்தவரிடம் கேட்டபோது, புகார் அளித்த இளைஞர் தெரிவித்தபடி கூடுதல் கட்டணம் வசூலிப்பது உண்மை என்பது தெரியவந்தது.
இதையடுத்து உடன் வந்திருந்த நகராட்சி ஆணையர் தட்சணாமூர்த்தியிடம், “இங்கு எழுதப்பட்ட டோல் ஃபிரீ எண்ணுக்கு பதில் உங்கள் மொபைல் எண்ணை எழுதுங்கள். யார் போன் செய்தாலும் எடுத்து பேசுங்கள். இந்த ஒப்பந்தராரர்மீது நடவடிக்கை எடுங்கள்” என ஆட்சியர் உத்தரவிட்டார்.
இன்று மாலைவரை அக்கட்டண கழிவறையில் நகராட்சி ஆணையர் தன் மொபைல் எண்ணை எழுதவில்லை என்பது குறிப்பிடதக்கது.