சிதம்பரம் நடராஜர் கோயிலுக்குச் சொந்தமான நிலங்களை மீட்க நடவடிக்கை எடுக்கும்படி கடலூர் ஆட்சியருக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு.
சிதம்பரம் நடராஜர் கோயிலுக்குச் சொந்தமாக, தமிழ்நாடு முழுவதும் பல்வேறு மாவட்டங்களிலும், புதுச்சேரியின் காரைக்கால் மாவட்டத்திலும், 3,000 ஏக்கர் நிலங்கள் உள்ளதாகவும், அவற்றை மீட்கக் கோரியும் ராதாகிருஷ்ணன் என்பவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்குத் தாக்கல் செய்திருந்தார்.
இந்த நிலங்களை பொது தீட்சகர்கள், முறையாக பராமரிக்கவில்லை என்பதால், அவற்றை பாதுகாக்க வேண்டும் என, முதலமைச்சரின் தனிப்பிரிவுக்கு புகார் அனுப்பியதாகவும், அந்த புகார் கடலூர் மாவட்ட ஆட்சியருக்கு அனுப்பி வைக்கப்பட்டதாகவும் மனுவில் குறிப்பிட்டுள்ளார்.
அதன் அடிப்படையில், மாவட்ட ஆட்சியர் விசாரணை கூட்டம் கூட்டிய போதும், அதன்பின் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த மனுவை விசாரித்த நீதிபதி தண்டபாணி, சிதம்பரம் நடராஜர் கோயிலுக்குச் சொந்தமாக, கடலூர் மற்றும் புதுச்சேரியின் காரைக்கால் மாவட்டங்களில் உள்ள நிலங்களை மீட்பது தொடர்பாக விசாரணை நடத்தி, 12 வாரத்திற்குள் நிலத்தை மீட்பதற்கு தேவையான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என கடலூர் மாவட்ட ஆட்சியருக்கு உத்தரவிட்டுள்ளார்.