கீழ்பாக்கம் கல்லறை தோட்டத்தில் மயங்கி கிடந்த நபரை காவல் ஆய்வாளர் ராஜேஸ்வரி மீட்டு மருத்துவமனையில் அனுமதித்த நிலையில், அவர் சிகிச்சை பலனின்றி இன்று உயிரிழந்தார். இந்த சம்பவம் பலரை சோகத்தில் ஆழ்த்தியுள்ளது. நேற்று மயங்கி விழுந்த இளைஞரை தன் தோளில் சுமந்து சென்று வாகனத்தில் ஏற்றி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்த பெண் காவல் ஆய்வாளர் ராஜேஸ்வரியின் செயல் பொதுமக்களிடையே பாராட்டைப் பெற்றுள்ளது. அதுமட்டுமில்லாமல் இன்ஸ்பெக்டர் ராஜேஸ்வரியின் சேவையை கேள்விப்பட்ட தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் நேரில் அழைத்து பாராட்டினார்.
வடகிழக்கு பருவமழை தொடங்கியதில் இருந்து, தமிழ்நாடு முழுவதும் பரவலாகப் பலத்த மழை பெய்து வருகிறது. சென்னையிலும் தொடர்ந்து மழை பெய்து வருகிறது. பல இடங்களில் தண்ணீர் தேங்கியுள்ளது. பல சாலைகள் வெள்ளத்தில் மூழ்கின. பலஆயிரம் கணக்கான மரங்கள் சாய்ந்தன. இதற்கிடையிலும் பேரிடர் மீட்புக் குழுவினர் சேதங்களை அகற்றி, பொதுமக்களை மீட்கும் பணிகளில் முழுவீச்சில் ஈடுபட்டு வருகின்றனர். பலரை காப்பாற்றி நிவாரண முகாம்களில் தங்க வைத்து வருகிறார்கள்.
சென்னை டி.பி.சத்திரம் அருகே அண்ணாநகர் பகுதியில் மரம் விழுந்ததில் உதயா என்ற நபரை சிக்கிக் கொண்டார் என்ற தகவலை அறிந்ததும் உடனடியாக சம்பவ இடத்திற்கு பெண் இன்ஸ்பெக்டர் ராஜேஸ்வரி மற்றும் அவரது குழுவினர் சென்றார்கள்.
மயங்கிய நிலையில் கிடந்த நபரை பார்த்ததும் சற்றும் தாமதிக்காமல் தனது தோளில் தூக்கிக் கொண்டு வந்து ஆட்டோவில் ஏற்றி கீழ்பாக்கம் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுப்பி வைத்தார்.
இந்த சம்பவத்தை பார்த்த பொதுமக்கள் அவரை, “சிங்கப்பெண்ணே, மனிதநேயம் கொண்டவர்” துணிச்சலான பெண்” என பாராட்டி வருகின்றனர். ஆனால் மயங்கி விழுந்த இளைஞரை தன் தோளில் சுமந்து சென்று வாகனத்தில் ஏற்றி மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்ட நிலையில், அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்த சம்பவம் அனைவரையும் சோகத்தில் ஆழ்த்தி உள்ளது.