பெட்ரோல் டீசல் விலையை கண்டித்து இன்று தமிழகம் முழுவதும் காங்கிரஸ் கட்சி சார்பாக ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. அதன் ஒரு பகுதியாக சென்னை சைதாப்பேட்டை பகுதியில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் முன்னாள் காங்கிரஸ் கமிட்டி தலைவரும் திருச்சி நாடாளுமன்ற உறுப்பினருமான திருநாவுக்கரசர், நாடாளுமன்ற உறுப்பினர் ஜோதிமணி ஆகியோர் கலந்து கொண்டனர். பின்னர் பேசிய திருநாவுக்கரசர்,
பெட்ரோல், டீசல் விலை உயர்வால் இந்தியாவில் உள்ள அனைத்து தரப்பு மக்களும் பாதிக்கப்படுகிறார்கள் என்ற அவர், மத்திய அரசுக்கு நிதி நெருக்கடி ஏற்படும் போதெல்லாம் இது போன்ற விலை வாசியை ஏற்றி மக்களுக்கு பாதகம் செய்து வருகிறது என்றார். மேலும், விலை உயர்வால் தனியார் நிறுவனங்கள் இதனால் நிறைய கொள்ளையடிக்கிறார்கள் என கூறினார்.
தொடர்ந்து பேசிய அவர், மத்திய புதிய அமைச்சரவை மாற்றத்தால் ஒன்றும் மாற போவது இல்லை, ஏற்கனவே இருந்த அமைச்சர்கள் தான் தற்போது அமைச்சராக இருக்கிறார்கள், ஒரு சிலர் மட்டுமே புதிதாக ஓர் அமைச்சராக பொறுப்பேற்று இருப்பதாகவும் குற்றம் சாட்டினார். மேலும், “ராஜினாமா செய்ய வேண்டும் என்றால் மோடி தான் ராஜினாமா செய்ய வேண்டும்” என கூறினார்
மேலும், தமிழகத்திற்கு மத்திய அமைச்சரவையில் ஒருவருக்கு இடம் கொடுத்தது என்பது மகிழ்ச்சியாளிக்கிறது. மேலும், அவர் தமிழ் நாட்டின் நலனுக்காக பாடுபட வேண்டும் என தெரிவித்தார்.
இதனைத் தொடர்ந்து நாடாளுமன்ற உறுப்பினர்கள் திருநாவுக்கரசர் ஜோதி ஆகியோர் தமிழக ஆளுநரை நேரில் சந்தித்து பெட்ரோல் டீசல் விலையை குறைப்பதற்காக மனுவை வழங்கினார்கள்.